Tuesday, May 24, 2011

தேடுகின்றேன்...





தலை சாயும் இடத்திலெல்லாம் உன் மடியைத் தேடுகின்றேன்
கண் மூடிய ஒரு நொடிப் பொழுதில் உன்னைப் பற்றிய கனவினைத் தேடுகின்றேன்
விழித்தவுடன் பல் துலக்க உன் விரலினைத் தேடுகின்றேன்
குளித்தவுடன் தலை துவட்ட உன் முந்தானையைத் தேடுகின்றேன்
பசியாறும் போது உணவில் உன் வாசனையைத் தேடுகின்றேன்..




வேலைக்குச் செல்லும் வழியெங்கும் உன் கொலுசின் ஓசையைத் தேடுகின்றேன்
அலுவலகத்தில் யார் அழைத்தாலும் உன் குரலைத் தேடுகின்றேன்
தொடும் இடத்தில் எல்லாம் உன் சிலிர்ப்பைத் தேடுகின்றேன்
பார்ப்பவர்களிடமெல்லாம் உன் புன்னகையைத் தேடுகின்றேன்
தொட்டுப் பேசுபவர்களிடமெல்லாம் உன் வெட்கத்தைத் தேடுகின்றேன்


கை கொடுத்து பேசத் தொடங்குபவர்களிடமெல்லாம் உன் மென்மையைத் தேடுகின்றேன் கை பேசி ஒலிக்கும் போதெல்லாம் உன் பெயரைத் தேடுகின்றேன் வைத்த பிறகோ உன் தவிப்பைத் தேடுகின்றேன்
யார் யாரோ பேசுகையில், நீ கொஞ்சிப் பேசும் உன் தமிழினைத் தேடுகின்றேன் நடந்து செல்கையில் உன் நிழலைத் தேடுகின்றேன் அத்தனையும் நிஜமா என்று என்னை நானே கிள்ளிப் பார்க்கையில் உன் வலியைத் தேடுகின்றேன் என் அத்தனை தேடலுக்கும் சொந்தக் காரியான நீ அழகியா இல்லை என்னை சிறுகச் சிறுகச் சாகடிக்கும் அரக்கியா?


காதலுடன்,
புன்னகை....